சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி: கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மக்கள் மிகவும் துயரத்துடன் பரிதவித்து வருகின்றனர். அதிகாரிகள் சில கிராமங்களுக்கு சென்று கூட பார்க்கவில்லை. இதனால்தான் மக்கள் ஆத்திரத்தில் சாலை மறியல், அதிகாரிகள் முற்றுகை என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உண்மையிலேயே உதவி செய்ய வருபவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். எனவே மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்பது எனது கருத்து. மக்களின் நியாயமான போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் செய்யாமல் மக்களுக்கான அவசியமான காரியங்களில் ஈடுபட வேண்டும்.