சென்னை: லூசுத்தனமான அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,அறிக்கை தொடர்பாக இளங்கோவன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார். தமிழக காங்கிரஸ் வடக்கு மண்டல மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், அணிகளின் தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வெல்ல பிரசாத் முன்னிலை வகித்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, துணை தலைவர் தாமோதரன், முன்னாள் எம்பி விஸ்வநாதன், பொது செயலாளர் சிரஞ்சீவி, சென்னை மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், சிவ ராஜசேகரன் உள்ளிட்ட 35 மாவட்ட தலைவர்கள், அஸ்லாம் பாட்ஷா, ஜான்சிராணி, கஜநாதன், மகாத்மா சீனிவாசன் உள்ளிட்ட அணி தலைவர்கள் கலந்து கொண்டனர். திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: தமிழகத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்காக பூத் அளவில் ஏஜென்டுகள் நியமித்தல், மாவட்ட நிர்வாகிகள் நியமித்தல், அணிகள் சார்பில் பொறுப்பாளர்களை நியமித்தல் போன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.