புதுடெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க பரிசீலிக்கப்படுவதாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ் நிறுனவத்துக்கு முறைகேடாக ரூ.305 கோடி நேரடி வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான அனுமதி வழங்கியதாகவும், இதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பற்றி சிபிஐ.யும், மத்திய அமலாக்கப் பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் சிதம்பரம் உட்பட 9 பேரை குற்றவாளியாக சேர்த்து, அமலாக்கப் பிரிவு சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஒரு முறையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு முறையும் விசாரித்துள்ளனர். இதில், சிதம்பரத்திடமும், கார்த்தி சிதம்பரத்திடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகையும், ஒரு துணை குற்றப்பத்திரிகையும் கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்டது.