அமெரிக்காவில் யூதர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் பெயர் சூட்டும் விழாவில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானார்கள்.  அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள ஸ்கொரல் ஹில் பகுதியில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. இதற்காக ஏராளமான யூதர்கள் அங்கு திரண்டிருந்தார்கள். இந்நிலையில் கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்  ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் விழாவில் கலந்து கொண்டவர்கள் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினார்கள்.துப்பாக்கியால் சுடும்போது, யூதர்கள் அனைவரும் சாக வேண்டும் என அந்த நபர் கத்தியுள்ளார். இந்த திடீர் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனிடையே தகவல் அறிந்த போலீசார்  அங்கு விரைந்தனர். அங்குள்ள அறை ஒன்றில் பதுங்கியிருந்த துப்பாக்கிச்சூடு நபரை மடக்கி பிடித்தனர். தாக்குதல் நடத்திய நபரை பிடிக்கும் முயற்சியில் 4 போலீசார் காயமடைந்தனர். பிடிப்பட்ட நபரிடம் போலீசார் நடத்திய   விசாரணையில் அவரது பெயர் ராபர்ட பவர்ஸ்(46) என தெரியவந்துள்ளது.

ராபர்ட் காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க வரலாற்றிலேயே யூதர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு  அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை. இது மிகவும் கொடுமையானது. நமது நாடும் உலகமும் இந்த சம்பவத்தால்  அதிர்ச்சி அடைந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 31ம் தேதி அமெரிக்க கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றார். இந்த சம்பவத்துக்கு போப்பாண்டவரும் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: