மதுரை: எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானதும் ஆட்சி கவிழ்ந்து விடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மகளிர் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். பேரணியை துவக்கி வைத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற துரோகிகள், இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என ஒரு வாரம், ஒரு மாதம், 10 மாதம் என கெடு விதித்து ஆருடமாக கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.