மும்பை: வந்தே மாதரம் தேசிய கீதம் இல்லை என்பதால் அதனை பாடமாட்டேன் என்று பாரிப் பகுஜன் மகாசங் கட்சித் தலைவரும் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.வந்தே மாதரம் பாடலை பாடமாட்டேன் என்றும் முஸ்லிம்கள் அந்த பாடலை பாட வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி அறிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அவரது வழியில், அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கரும் வந்தே மாதரம் பாடலை பாட மாட்டேன் என்று அறிவித்திருக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தின் பர்பனியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரகாஷ் அம்பேத்கர் கூறியதாவது;‘ஜன கன மன’ பாடல்தான் நமது தேசிய கீதம். வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல. ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய கீதம் ஒன்று இருக்கும்போது மற்றொரு பாடலின் தேவை எங்கிருந்து எழுகிறது?நமது நாட்டின் தேசிய கீதத்தின் மீது பாஜ.வுக்கு நம்பிக்கை இல்லையா? வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தேவையில்லாத வேலை.