புதுடெல்லி: உ.பி, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர், என்.டி.திவாரி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். டெல்லியில் அவரது உடலுக்கு ஐ.மு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வராக பதவி வகித்தவர் என்.டி.திவாரி(92). ஆந்திர மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட என்.டி.திவாரி, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார். என்.டி.திவாரிக்கு நேற்றுமுன்தினம் பிறந்தநாள். அன்றே அவர் காலமானார்.