புதுடெல்லி : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிப்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி கேரள அனைத்து பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இது கேரள மாநிலம் மட்டுலில்லாமல் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து கண்டிப்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என அம்மாநில அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. பெண்களை அங்கு செல்ல விடாமல் பல்வேறு போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதில் குறிப்பாக சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதால் போலீசாரால் தடியடி நடத்தப்பட்டது.