சென்னை: அதிமுகவை மீட்பேன் என்று கூறும் டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து வெற்றிபெற்ற பிறகு தொகுதி பக்கம் திரும்பி பார்க்கவில்லை. முதலில் அவர் ஆர்.கே.நகர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு அதை மீட்டு எடுக்க தயாரா? அதன்பிறகு அதிமுகவை மீட்டெடுப்பது பற்றி பேசட்டும். அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்துள்ள ஜெயலலிதா சிலை, வேறு யார் மாதிரியோ உள்ளது அதனால் சிலையை மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாற்றவில்லையே என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதா முழு உருவ சிலை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த சிலையை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.