சபரிமலை ஐயப்பன் கோயில் மற்ற கோயில்களை விட வித்தியாசமானதாகும். இங்கு ஐயப்பன் ஒரு நித்திய பிரம்மச்சாரியாக உள்ளார். அதனால் தான் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள் சென்றால் ஐயப்பனின் பிரம்மச்சரியத்திற்கு களங்கம் ஏற்பட்டு விடுமா என்று சிலர் கேட்கின்றனர். அதில் எந்த அர்த்தமும் இல்லை. வாழ்க்கையில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி....பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு இடையூறு செய்வது நல்லதல்ல அல்லவா? அது போல தான் இதுவும்.உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம் ஆகியவற்றையும், சபரிமலை கோயிலில் உள்ள பெண்களுக்கான கட்டுப்பாடுகளையும் இணைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை. அந்த இரண்டையும் ஒழித்ததைப் போல சபரிமலையில் பெண்களுக்கு உள்ள கட்டுப்பாட்டையும் ஒழிக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சபரிமலையில் கடைப்பிடிக்கப்படும் ஆசாரங்களால் யாருக்கும் எந்த துன்பமும், சிரமமும் ஏற்படுவதில்லை. இங்கு எந்த பெண்ணின் உரிமைகளும் பறிக்கப்படுவதில்லை.சபரிமலைக்கு செல்லப்போவதாக கூறும் பெண்கள் யாரும் பக்தியால் உந்தப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் வீம்புக்காகவும், சவாலுக்காகவுமே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சபரிமலையில் பெண்களுக்கு தடை இருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என சபரிமலை செல்லும் அனைவருக்கும் தெரியும். ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டுமே அங்கு தடை உள்ளது. அது சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஒரு முக்கிய ஆசாரமாகும். அதை ஏன் தடுக்க முயற்சிக்கின்றனர் என புரியவில்லை.