புதுடெல்லி: முக்கியமான நகரங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுவதுபோல், நாடு முழுவதும் 53 நகரங்களில் ஆதார் சேவை மையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. நாட்டில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் அடையாள என்ற பயோமெட்ரிக் அட்டை பயன்படுத்தப்படுகிறது. உதய் என்ற அமைப்பு இந்த அட்டையை வழங்கி வருகிறது. இதில் பெயர், முகவரி, புகைப்படம், கைரேகை, கருவிழி, செல்ேபான் எண் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வங்கி கணக்குகள், சிம்கார்டுக்கு ஆதார் எண் தேவையில்லை என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் வருமான வரித்தாக்கல், மற்றும் பான் எண் பெற ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆதார் பதிவு மற்றும் இடமாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆதாரை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் நாள் தோறும் 4 லட்சம் பேர் தங்கள் பதிவுகளை புதுப்பித்து வருகின்றனர். மேலும் 1 லட்சம் பேர் புதிதாக ஆதார் பதிவு செய்கின்றனர். இந்த பதிவுகள் தற்போது தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் செயல்படும் ஆதார் மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.