மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், குடிகாடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு உள்ளது. இது பல்வேறு பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. ஆனால் இந்த ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடக்கிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் 4 சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகள் மூலம் சட்டவிரோதமாக மணல் திருடுவது அதிகரித்துள்ளது. அதிகாரிகளும் அபராதம் விதிப்பதோடு சரி. உறுதியான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. இதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. சட்டவிரோத மணல் திருட்டு அன்றாட நடவடிக்கையை போல மாறிவிட்டது. 2050ல் நிலத்தடி நீர் குறைவால் சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் 10 கோடி மக்கள் பாதிப்பர் என மத்திய நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. இதை தடுக்க மணல் திருட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.