சென்னை: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 பைனலில், மதுரை பேந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மதுரை பேந்தர்ஸ் முதலில் பந்துவீசியது. டிராகன்ஸ் தொடக்க வீரர்களாக நிஷாந்த், கேப்டன் ஜெகதீசன் களமிறங்கினர். ஜெகதீசன் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, மறு முனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
நிஷாந்த் 1, அனிருத் 4, சதுர்வேத் 9, தோத்தாத்ரி 0, அபினவ் 1 ரன்னில் அணிவகுக்க, டிராகன்ஸ் 4.4 ஓவரில் 21 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த விவேக் 13, ராமலிங்கம் ரோகித் 15 ரன்னில் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ஜெகதீசன் 51 ரன் எடுத்த நிலையில் (44 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) வருண் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சிலம்பரசன் 2, முகமது 17 ரன்னில் பெவிலியன் திரும்ப, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவரில் 117 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மதுரை பந்துவீச்சில் தன்வர் 4, லோகேஷ் ராஜ் 3, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் களமிறங்கியது.