15 ரன்னுக்கு 3 விக்கெட் சரிந்தது ரன் குவிக்க முடியாமல் இந்திய அணி திணறல்: கனமழையால் ஆட்டம் பாதிப்பு

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ்  மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. கனமழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியதை தொடர்ந்து,  டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் அரை மணி நேரம் முன்கூட்டியே  தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றும் கனமழை கொட்டியதால் ஆட்டம் தாமதமானது.

மழை நின்ற பின்னர், டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் இளம் வீரர் ஓலி  போப் (20 வயது) அறிமுகமானார். பென் ஸ்டோக்சுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ்  யாதவுக்கு பதிலாக செதேஷ்வர் புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பெற்றனர். இந்திய அணி தொடக்க வீரர்களாக முரளி விஜய், கே.எல்.ராகுல்  களமிறங்கினர். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரின் 5வது பந்திலேயே ஸ்டம்புகள் சிதற விஜய் டக் அவுட்டாகி வெளியேறினார். ராகுல் 8 ரன் எடுத்து  ஆண்டர்சன் வேகத்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். இந்தியா 8.1 ஓவரில் 11 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய  நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், புஜாரா 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் (25 பந்து) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி பெவிலியன்  திரும்பினார். மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, இந்தியா 8.3 ஓவரில் 15 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. மழை தொடர்ந்து கொட்டியதால் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் இதே நிலை நீடித்தது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: