புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களின் பெரும்பாலான பொதுக்கூட்டங்களில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் உள்ள ஆர்வத்தை பற்றியும், பொது வாழ்வில் பெண்களை ஈடுபடுத்துவது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்குமென்றும் கூறுகிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், உங்களின் உறுதிப்பாட்டை காண்பிக்க, வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதை விட வேறு எது சிறந்த வழியாக இருக்க முடியும்? வெகு விரைவில் சட்டமன்ற தேர்தல்களும், மக்களவை தேர்தலும் நடக்க உள்ளதால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கு இதை விட சரியான நேரம் எதுவுமில்லை.