சென்னை : தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான தமிழிலும் பயண விவரங்கள் அச்சிட்டு அளிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் ரயில்வே துறையை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல் சேவை மையம், டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள், இலவச வைபை, எஸ்கலேட்டர், லிப்ட் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து பயணிகள் ரயில் டிக்கெட்டுகளில் சிறிது மாற்றம் கொண்டுவர ரயில்வே துறை முடிவெடுத்தது. இதன்படி ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த ரயில் பயணிகளுக்கான டிக்கெட்டுகளில் ஊரின் பெயர்களை அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.