சென்னை: காயத்ரி ரெமா, 2015ல் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, ‘இரிடியம்’, ‘ஒருநாள்’, ‘மங்களபுரம்’, ‘ஹரஹர மகாதேவ்’, ‘காசு மேல காசு’, ‘பேய் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் காயத்ரி ரெமா அளித்த பேட்டியொன்றில், தனக்கு நடந்த ஆபாச அத்துமீறல்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘‘இதுவரை இன்ஸ்டாகிராமில் மட்டுமே கிட்டத்தட்ட 300 முதல் 400 பேரை நான் பிளாக் செய்திருக்கிறேன். அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் ஆபாசமான தனிப்பட்ட புகைப்படங்களை கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் எனக்கு டைரக்ட் மெசேஜில் அனுப்பித் தொல்லை கொடுத்தார்கள். இப்படிப்பட்டவர்களை உடனடியாக பிளாக் செய்வதை தவிர வேறு வழியில்லை.
இதுபோன்ற நபர்கள் மீது நான் எவ்வளவோ புகார்கள் கொடுத்து பார்த்தேன், ஆனால் எவ்வளவுதான் புகார் கொடுத்தாலும் திருந்தவே மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் நானும் புகார் கொடுத்து அலுத்துவிட்டேன். அதன்பின் தான் என்னால் அவர்கள் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாதபோது நேரடியாக பிளாக் செய்யத் தொடங்கினேன். சிலர் இன்ஸ்டாகிராம் மெசேஜ் பகுயில் உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது, உங்களோடு போட்டோ எடுக்க வேண்டும், ஆட்டோகிராப் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதெல்லாம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று.
ஆனால் இதுபோல் எல்லைமீறி ஆபாசப் புகைப்படங்களை அனுப்புவது மிகவும் மோசமான செயல். சோசியல் மீடியா என்பது இன்றைய தலைமுறைக்கு கிடைத்த வரப்பிரசாதம், அதில் நாம் கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. பலர் இதைத்தங்களின் வளர்ச்சிக்கு நல்லமுறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது தேவையில்லாமல் இதுபோன்ற ஆபாசப் பதிவுகளையும் புகைப்படங்களையும் அனுப்பித் தொல்லை கொடுப்பவர்களை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று காயத்ரி ரெமா தெரிவித்துள்ளார்.
