நேகாவை சீண்டி பார்த்த இயக்குனர்

இந்தி, தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் நடித்து வரும் நேஹா தூபியா, சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அதில், காஸ்டிங் இயக்குனர் ஒருவர் தன்னிடம், ‘நீ சிரிக்கும்போது மிகவும் அசிங்கமாக இருக்கிறாய். உன் முகத்தில் எந்த ஈர்ப்பும் இல்லை. அதனால், இனிமேல் நீ சிரிக்காதே’ என்று சொன்னதாக நேஹா தூபியா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘அவரது வார்த்தைகள் என் மனதில் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் வரை ஆழமாக பதிந்துவிட்டது. அது என்னை துரத்தியது. ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற பிறகும் கூட இப்படிப்பட்ட விமர்சனத்தை நான் கேட்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் நாமே அந்த வார்த்தைகளை உண்மை என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறோம். இந்த கருத்து எனது தன்னம்பிக்கையை பெரிதும் பாதித்தது. படப்பிடிப்பு தளங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட சுதந்திரமாக புன்னகைக்க முடியாமல் தவித்தேன்.

‘தன்னம்பிக்கையே மிகப்பெரிய அழகு’ என்று மற்றவர்கள் நிர்ணயிக்கும் அழகுக்கான அளவீடுகளுக்குள் நாம் பொருந்துவதை விட, நம்முடைய தனித்துவமும், தன்னம்பிக்கையுமே எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை பிற்காலத்தில் நான் உணர்ந்துகொண்டேன்’ என்று நெகிழ்ந்தார்.

Related Stories: