ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருக்கும் இளம் நடிகை அனன்யா நாகல்லா. மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய இவர், நடிப்பின் மீதான ஆர்வத்தினால் ஆரம்பக்காலங்களில் குறும்படங்களில் நடித்துவந்தார். பின்னர், திரைத்துறையில் வாய்ப்பு கிடைத்ததும், ‘மல்லேஷம்’ படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, ‘வக்கீல் சாப்’, ‘பிளேபேக்’, ‘மேஸ்ட்ரோ’, ‘சாகுந்தலம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பல படங்களில் பிசியாக இருந்து வரும் அனன்யா, சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உணர்ச்சிவசப்பட்டுப் பதிலளித்தார். அவரிடம், ‘சமீபத்தில் எதற்காவது அழுதீர்களா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர், ‘‘பல ஆண்டுகளுக்குப் பின் ஒருவருக்காக நான் அழுதேன். அதைக் காதல் தோல்வி என்று கூற விரும்பவில்லை. ஆனால், அவரை மிகவும் நம்பினேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார். தினமும் காலையில், எழுந்தவுடன் அந்த நினைவுகள் என்னை வாட்டுகின்றன.
நான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் அந்த நினைவும் மீண்டும் மீண்டும் வந்து என்னைத் தாக்குகின்றன. அந்த வழியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை. இந்த வேதனையைக் கடந்த மூன்று ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன்’’ என்று வேதனையுடன் கூறினார். அனன்யாவின் இந்த உருக்கமான பதில் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
