சென்னை: தமிழில் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜூ முருகன் எழுதி இயக்கியுள்ள ‘மை லார்ட்’ என்ற படம், வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இதை எஸ்.அம்பேத்குமார் வழங்கும் ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். சசிகுமார், சைத்ரா ஜே.ஆச் சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாலா, மாரி செல்வராஜ், என்.லிங்குசாமி, எஸ்.டி.விஜய் மில்டன், ஏ.வெங்கடேஷ்,
த.செ.ஞானவேல், பிரேம் குமார், ஆர்.ரவிக்குமார் கலந்துகொண்டனர்.
அப்போது சசிகுமார் கலகலப்பாக பேசியதாவது: ‘மை லார்ட்’ படம் கோர்ட் ரூம் டிராமா கிடையாது. முத்துச்சிற்பி என்ற கடைக்கோடி மனிதனுக்கு தண்டிக்கக்கூடிய அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும் என்பது கதை. பாலா அண்ணனின் ‘சேது’ படத்தில் உதவி இயக்குனராகி, படிப்படியாக முன்னுக்கு வந்துள்ளேன். நான் அடைந்துள்ள புகழ் எல்லாம் பாலா அண்ணனை சேரும். பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம்,கோவில்பட்டி இளம் பெண்ணாக சைத்ரா ஜே.ஆச்சார் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.
பெரும்பாலும் தோல்விஅடைந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறேன். ஒரு இயக்குனருடைய கதையும், படமும் தோற்கலாம். அந்த இயக்குனர் எப்போதுமே தோற்க மாட்டார். ‘மை லார்ட்’ படத்தை தொடர்ந்து மீண்டும் நான் ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். முன்னதாக ராஜூ முருகன் டைரக்ஷனில் நடிக்கிறேன் என்று சொன்னபோது, அவர் ஒரு சைக்கோவாயிற்றே என்று என்னை சிலர் பயமுறுத்தினார்கள். பணியாற்றிய பிறகுதான் தெரிந்தது, தரமான படங்களை கொடுக்க நினைத்து செயல்பட்டு வருவதில் அவர் ஒரு சைக்கோ என்று.
