ஐதராபாத்: தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா சியாமளா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாவலா சியாமளா, தற்போது போதிய பட வாய்ப்புகள் இல்லாமலும், முதுமை மற்றும் உடல்நலக் குறைவாலும் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறார். இவருடைய மகளும் தீவிர உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கே வழியில்லாத நிலையில் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதையறிந்த அல்லு அர்ஜூன், பாவலா சியாமளா மற்றும் அவரது மகளின் மருத்துவச் செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்காக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஏற்கனவே, ஆந்திர மாநிலம் வேட்டப்பாளையத்தில் பட்டாசு ஆலை விபத்தில் தந்தையை இழந்த மாற்றுத்திறனாளி சிறுமி கதிம்பள்ளி துர்காவுக்கு மாதந்தோறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் அல்லு அர்ஜூன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
