ஐதராபாத்: நடிகை லாவண்யா திரிபாதி, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சமூக ஊடகங்களில் தன்னையும் தனது குடும்பத்தினரையும் குறிவைத்து தொடர்ச்சியான ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் அவதூறுகள் பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ‘பர்பிள் க்ரேயான் 00’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பதிவிடுகிறது. அந்த பக்கத்தில் எனக்கு எதிராக மட்டுமல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக ஆட்சேபனைக்குரிய பதிவுகள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை, நற்பெயர் ஆகியவற்றுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலேயே குறிப்பிட்ட நபர் செயல்படுகிறார்.
பல பதிவுகள் மற்றும் கருத்துகளில் ஆபாசமான மொழி மற்றும் எனது குணம் மற்றும் ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அந்த பதிவுகளின் நோக்கமே தீங்கிழைக்கும் வகையிலும், என்னை பொதுவழியில் அவமானப்படுத்தும் வகையிலும் உள்ளது. இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் நபரை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், தாக்குதல் பதிவுகள் இன்ஸ்டா தளத்திலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். சைபர் கிரைம் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினர், மேலும் கணக்கின் பின்னணியில் உள்ள நபரைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தனர்.
