சென்னை: இந்தியாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தன் மீது சுமத்தப்படும் வீண் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் குறித்து ஆவேசமாக தனது சோஷியல் மீடியா பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவரது பதிவில், ‘‘கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பல விமர்சனத்தை சந்தித்து வருகிறேன். அவை அனைத்தும் எனக்கு வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்தினாலும், நான் தொடர்ந்து பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தேன். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது அந்த எல்லையை மீறிவிட்டது.
8 ஆண்டுகளுக்கு முன் நடந்த எனது தனிப்பட்ட உரையாடல் ரெகார்ட் செய்யப்பட்டு அதில் சில பகுதிகள் நீக்கப்பட்டு அந்த ஆடியோ எனக்கு தெரியாமல் தற்போது தவறான அர்த்தம் மற்றும் நோக்கத்தில் பரப்பப்படுகிறது. இது எனது தனிப்பட்ட வாழ்க்கை, நலன் விரும்பிகள், குடும்பத்தினர் ஆகியோரை பாதித்துள்ளது. இது முழுக்க, முழுக்க ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நேரத்தில் ஒரு சிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும், அமைதியையும் விலையாக கொடுத்து வெறுப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்துவது துரதிஷ்டவசமானது.
அடுத்த 24 மணி நேரத்தில் என்னை பற்றி பரவும் தவறான தகவல்களை ஊடகத்தினர், தனிநபர்கள், சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்ஸர்கள் அனைவரும் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ல் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன், ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் அந்த திருமணம் கைவிடப்பட்டது. அந்நேரத்தில் ரக்ஷித் ஷெட்டி மற்றும் அவரது தாயாருடன் ராஷ்மிகா மந்தனா பேசிய ஆடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
