நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு டிவிட்டரில் ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். விஜய் சேதுபதி, 800 படத்தில் நடிப்பதாக அறிவித்து இருந்தார். இந்த படம், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு சொல்லும் படமாகும். முரளிதரன், இலங்கை போரின்போது அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக இருந்தவர் எனக் கூறி சில அமைப்பினர், திரையுலகினர் ஆகியோர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்கக் கூடாது என போர்கொடி தூக்கினர். இந்நிலையில், முரளிதரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘என்னால், தமிழ் திரையுலகின் சிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிக் கொள்ளட்டும்’ என கூறியிருந்தார். இதையடுத்து அந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார்.
இந்நிலையில் டிவிட்டரில் ரித்திக் என்ற பெயரில் இருக்கும் ஒரு நபர், விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். 800 படத்தில் நடிக்க, முன்பு விஜய் சேதுபதி எடுத்த முடிவுக்காக அவர் இதுபோல் மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அந்த மர்ம நபரின் மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூன்று பிரிவில் வழக்கு பதிவுஇந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் ‘ரித்திக்’ என்ற பெயரில் ‘800’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிவிடுவேன் என ஆபாசமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பதிவுக்கு திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதைதொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி தரப்பில் இருந்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் இருந்த பதிவை நீக்கினர். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது ஐபிசி 153, 294(பி), 67 பி ஐடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.