சிரஞ்சீவி புதுபங்களாவில் நட்சத்திரங்கள் கொண்டாட்டம் ; ரஜினி, கமல் பங்கேற்காதது ஏன்?

பல கோடி செலவில் நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் புதிதாக பங்களா கட்டி உள்ளார். அதில் தன்னுடன் 80களில் திரையுலகில் பயணித்த நட்சத்திரங்களை அழைத்து தடபுடல் விருந்து வைத்தார். இதில் மோகன்லால், நாகார்ஜூனா, பாக்யராஜ், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஜெயராம், ரகுமான், ஜெகபதி பாபு, சுரேஷ், வெங்கடேஷ், பிரபு, நடிகைகள் ராதிகா, குஷ்பு, அம்பிகா, ராதா, ரேவதி, நதியா, அமலா, பூர்ணிமா, ஜெயப்ரதா என பலர் கலந்துகொண்டனர். அனைவரும் கோல்ட் அண்ட் பிளாக் நிறத்தில் உடை அணிந்திருந்தனர்.

இந்த விழாவில் தடபுடல் விருந்து பரிமாறப்பட்டதுடன் பாடலுடன் நடனமும் அரங்கேறியது. சீனியர் நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு இளம் நடிகர் மட்டும் எல்லோரையும் அன்புடன் வரவேற்று கவனித்துக்கொண்டிருந்தார். அவர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். சிரஞ்சீவியின் நட்பு வட்டாரங்கள் சந்திப்பு என்றாலும் ராம்சரண் அத்தனை நட்சத்திரங்களுக்கும் சிறுவயதிலிருந்து அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

80களில் நட்பு வட்டாரம் என்ற முறையில் நடக்கும் இந்த சந்திப்பின்போது ரஜினி, கமலும் கலந்துகொள்வது வழக்கம். இம்முறை இருவரும் மிஸ்ஸிங். ஏற்கனவே சிரஞ்சீவி அளித்த பேட்டி ஒன்றில், ‘ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் மரியாதை கிடைக்காது. நான் அந்த அவமானத்தை எதிர்கொண்டிருக்கிறேன்’ என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த சந்திப்பில் பங்கேற்றால் பிரச்னை திசை திரும்பக்கூடும் என்பதால் இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Stories: