உலகமெலாம் காக்கும் உண்மையான உலகநாயகனாக இருப்பது சிவபெருமானே ஆவார். சிவனை நினைத்தாலே நமது பாவங்கள் எல்லாம் நீங்கும். பல்வேறு காலங்களில் உலகில் வசிக்கும் உயிர்களின் துன்பத்தை போக்க பல வடிவங்கள் சிவபெருமான் எடுத்திருக்கிறார். அதில் ஒன்று தான் காக்கும் கடவுளான பைரவர் வடிவம். உக்கிர தெய்வம் எனப்படும் பைரவரை கோயிலில் மட்டுமே வணங்குவது முறை. ஆனால் நமது வீட்டில் நிறைந்திருக்கும் தீமைகளை நீக்க வீட்டிலேயே “பைரவர் பூஜை” செய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வீட்டிலேயே பைரவர் பூஜை செய்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலம் சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த சமயத்தில் பூஜையறையில் ஒரு சிறிய காலபைரவரின் படத்தையே அல்லது காலபைரவ யந்திரத்தையோ வைத்து, அப்படம் அல்லது யந்திரத்திற்கு மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, நெய்தீபங்கள் ஏற்றி, கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற ஏதேனும் ஒரு இனிப்பான உணவை நைவேத்தியமாக வைத்து பைரவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட்ட பின்பு, பைரவருக்கு ஆரத்தி எடுத்து பூஜையை முடிக்க வேண்டும்.