பாலியல் வழக்கில் சிக்கி கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சென்னை: தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடன இயக்குனராகப் பணிபுரிபவர், ஜானி. அவருக்கு கடந்த ஆண்டின் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், ஒரு பெண் நடனக்கலைஞர் ஜானி மீது போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து ஜானி மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்து தல் போன்ற பிரிவு
களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து ஜானியை தனது ஜனசேனா கட்சியில் இருந்து முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் அதிரடியாக நீக்கினார். மேலும், தெலங்கானா நடன இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட ஜானி மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. இதனால் தலைமறைவாக இருந்த ஜானியை பெங்களூருவில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன்படி, நாளை ஜனாதிபதி மாளிகையில் தேசிய விருது வழங்கப்பட இருந்த நிலையில், திடீரென்று நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

The post பாலியல் வழக்கில் சிக்கி கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: