சந்தவாசல் அருகே அருள்பாலிக்கிறார் குழந்தை பேறு அருளும் வேணுகோபால சுவாமி

சனிக்கிழமை மட்டுமே தரிசனம்

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சந்தவாசல் அருகே அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே மலைமேல் அமைந்துள்ளது கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயில். இக்கோயில் 5 மலைகளுக்கு நடுவே உள்ளதால் சமஸ்கிருதத்தில் இந்த இடம் பஞ்ச பருவத ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. சம்புவராய மன்னர்கள் படை வீட்டை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த போது அவர்களால் பல கோயில்கள் கட்டப்பட்டது. இதில் முதன்முதலாக சம்புவராயர்களின் தன்னாட்சியை நிறுவியவர் ராஜ கம்பீர சம்புவராயர். இவர் அமைத்த படை வீட்டில் ஓரு மலையின் பெயர் ராஜ கம்பீர மலை என்று இவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2560 அடி உயரமுள்ள இந்த மலை உச்சியில் கட்டப்பட்டதுதான் வேணுகோபால சுவாமி கோயில். இந்த மலைமீது சுனைகளும், கோட்டை கொத்தளமும் உள்ளது.

சம்புவராய மன்னன் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் வேண்டி கட்டிய கோயில்தான் கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயில். இங்கு ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, பக்தர்கள் வேண்டும் வரத்தை வழங்கி அருளாட்சி புரிந்து வருகின்றனர். காலை நேரத்தில் கதிரவனின் ஓளி பெருமாள் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை வியக்க வைக்கிறது. கட்டிட கலையில் சம்புவராய மன்னன் சிறந்து விளங்கியதற்கு இக்கோயில் சாட்சியாக உள்ளது. ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இக்கோயிலில்அமைத்துள்ளது.சம்புவராய மன்னர் மறைவுக்குப்பின் இந்த கோயிலில் சனிக்கிழமை மட்டும் பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்ற 6 நாட்களும் தேவர்களும், சித்தர்களும் பெருமாளுக்கு பூஜை செய்து வருவதாக ஐதீகம். புரட்டாசி மாதம் மட்டும் அனைத்து நாட்களும் கோயில் திறக்கப்பட்டிருக்கும்.

ஓவ்வொரு சனிக்கிழமை தோறும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறும். இதைதொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்கள்.முக்தி, கல்வி, செல்வம் வேண்டும் பக்தர்கள் சந்தான கோபால என்னும் மந்திரம் சொல்லி வழிபட்டால் சகல சவுபாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் வேணுகோபால சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியத்தை தடுத்து நிற்கும் தோஷங்களில் இருந்து விடுபட்டு புத்திர பாக்கியம் பெறலாம்.அமைவிடம் : வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் அனைத்து பஸ்களும் சந்தவாசல் பகுதியில் நின்று செல்லும். அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலுக்கு மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

Related Stories: