வற்றாத வளம் தரும் வராஹர்

இரண்யகசிபுவின் தம்பியான இரண்யாட்சனுக்கு பூலோகமும், தேவலோகமும் சிதறடிக்கப்படவேண்டும் என்று குறியாய் அலைந்தான். இரண்யாட்சன் தன் மாபெரும் படைகளோடு பூமியின் மையத்திற்கு வந்தான். அக்கூட்டம் ஓங்கி பூமியை உதைத்தது. சிறகாய் இருந்த பூமாதேவியின் சிரம் அழுந்தியது. பூமாதேவி பாரம் தாங்காது தவித்தாள்.

நிலைகுலைந்த பூமாதேவி தன் நிலை பிசகினாள். ஓர் மாபெரும் சமுத்திரத்தை நோக்கி அதிவேகமாய் சரிந்தது. பாற்கடல் பரந்தாமன் சட்டென்று எழுந்து அமர்ந்தார். இந்திரனும் தேவக் கூட்டமும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அட்டூழியம் தாங்காது அலறித் துடித்தார்கள். ‘எம்பெருமானே... எம்பெருமானே...’ என்று கைதொழுதார்கள். பிரம்மாவின் படைப்புத் தொழில் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. பிரம்மா கண்கள் மூடினார். கண்களில் நீர் வழிய வைகுண்ட வாசனைத் தொழுதார். பிரம்மாவின் உடல் மெல்ல அதிர ஆரம்பித்தது. நாசியில் மூச்சு முற்றிலும் வேறொரு தாளகதியில் இயங்கியது. ஒரு பெருமூச்சு புயல் போல பிரம்மாவின் நாசி வழியே  வெளியேறியது.  அது  ஈரேழுலகங்களையும் சுழற்றியடித்தது. பாற்கடல் பரந்தாமன், வராஹம் எனும் பன்றிக் குட்டியாய் வெளியேறினார். அது கட்டை விரலளவு இருந்தது. வெளிப்பட்டவுடன் வளர்ந்து கொண்டேயிருந்தது. சட்டென்று வானுயரமாய் விஸ்வரூபமெடுத்தது. அந்த திவ்ய சொரூபத்தை பார்த்தவர்கள் பிரமித்தார்கள். தங்களை மறந்தார்கள்.

தேவர்களும், முனிவர்களும் இதென்ன விசித்திரம் என்று வியந்தார்கள். அசையும்போது பிடரி சிலிர்த்தது. அந்த சிலிர்ப்பு மணியோசை போல் எட்டு திக்குகளிலும் எதிரொலித்தது. எம்பெருமான் வேதாந்த வராஹமாய் கர்ஜித்தார். உடலிலுள்ள ஒவ்வொரு ரோமக் குழியிலும் யாகங்கள் மறைந்திருந்தன. காதுகள் விடைத்து மேலே தூக்கியிருந்தன. பரந்த மார்போடும், திரண்ட தோள்களோடும் நடந்து வந்தார். நெடிதுயர்ந்து நிற்கும் எம்பெருமானை சகல தேவர்களும், ரிஷிகளும் பார்த்திருக்கும் போதே பகவான் யக்ஞவராஹர், பூமியை விழுங்கிய மகாசமுத்திரத்தைப் பார்த்தார். தன் நீண்ட குளம்புகளால் பிளந்துகொண்டு பாதாளம் வரை சென்றார். இரண்யாட்சன் தன் அசுரக் கூட்டத்தோடு வந்தான். வராஹரின் வினோதம் பார்த்தான். வாய்விட்டுச் சிரித்தான். தன் கதையால் அவரை தொடர்ச்சியாய் தாக்கினான். வராஹர் வஜ்ரமாய் நின்றார். அதைக் கண்ட இரண்யாட்சன்  இருண்டான். வராஹருக்கும், இரண்யாட்சனுக்கும் கடுமையான போர் நடந்தது. வராஹர் இரண்யாட்சனை இரண்டாகப் பிளந்தார். அவன் அலறலால் மூவுலகமும் அதிர்ந்தது.

வராஹரின் வலப்புறத்தே பூமா தேவியார் அமர்ந்திருக்க மெல்ல சமுத்திரத்திலிருந்து எம்பெருமான் மேலெழுந்தார். முப்பத்து முக்கோடி தேவர்களும், மனுஷ்யர்களும், சகல உயிர்களும் அதைக்கண்டு தொழுதனர். அப்போது ஓர் மூலையில் எம்பெருமானைத் தொழுதவாறு மாபெரும் செல்வந்தனான குபேரனும் நின்றிருந்தான். இப்பெருமானை பூலோகத்தில் எங்கேனும் அமர்விக்கவேண்டும் என ஆசை கொண்டான். அதற்கான காலம் வரும் வரை காத்திருந்தான்.

அது தாமிரபரணி எனும் புண்ணிய நதி பாயும் அழகான சீமை. விஷ்ணு தர்மன் என்னும் அரசன் அந்த ராஜ்யத்தை பரிபாலித்தான். விதவிதமான யாகங்கள் செய்து யாக சொரூபியான நாராயணனை வசீகரித்தான். யாகங்களிலேயே சிறந்த அஸ்வமேத யாகத்தை செய்தான். இவன் பக்திக்கு கட்டுப்பட்டு பிரம்மா, இந்திரன், குபேரன் என்று எல்லா தேவர்களும் வந்திருந்தனர். குபேரன் அந்த அரசனைக் கூப்பிட்டு இந்த புண்ணிய தலத்தில் யாக சொரூபியான வராஹருக்கு ஓர் கோயில் கட்ட வேண்டும் என்று பணித்தார். மேலும், இப்பெருமானை தரிசிப்போர்களுக்கு எக்காலத்தும் வற்றாத செல்வம் அருளுமாறு பக்தர்களின் பொருட்டு தான்   எம்பெருமானிடம் கேட்டுக்கொள்வதாய் கைபிடித்து உறுதியும் அளித்தார்.

உடனே, குபேரன் முன் நிற்க, அந்த அரசன் ஏராளமான பொருட் செலவில் கோயில் அமைத்தான். லக்ஷ்மிவராஹரை பிரதிஷ்டை செய்தான். யாகம் நடத்தினான். அப்போது யாகபாத்திரங்களெல்லாம் வராஹ சாந்நித்தியத்தால் கல்லாக மாறின. அதனால் இவ்வூர் சிலாசாலிபுரம்  என்றழைக்கப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட எல்லோரும் இங்கு யாகம் செய்ய ருசி (ஆசை) கொண்டதால் குருசி எனப்பட்டது. இவை இரண்டும் இணைந்து சிலாசாலிகுருசி அதாவது கல்லிடகுருசி (கற்கள் குவிந்த, யாக ருசி மிகுந்த ஊர்) என்று அழைக்கப்பட்டது. அதுவும் திரிந்து கல்லிடைக்குறிச்சி என நிரந்தரமாகியது. அழகான ஊர். கிழக்கே பார்த்த பெரிய கோயில். கொடிமரமும், பலிபீடமும் அடுத்தடுத்து உள்ளன. முகப்பு மண்டபம் தாண்டி ஊஞ்சல் மண்டபமும், கருட மண்டபமும் அருகருகே விரவியுள்ளன. பெரிய திருவடியான கருடாழ்வாரும், சிறிய திருவடியான ஆஞ்சநேய ஸ்வாமியும் வாகன மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இன்னும் உள்ளே நகர, எம்பெருமான்

லக்ஷ்மிவராஹர் உற்சவ மூர்த்தியாய் பொலிந்து நிற்கிறார்.

அங்கு நின்று பார்த்தாலே மூலஸ்தானத்தில் ஆதிமூலம், ஆதிவராஹம் எனும் லக்ஷ்மிவராஹர் கம்பீர புருஷராய் காட்சித் தருகிறார். அருகே வருவோரை உற்றுப்பார்த்து என்ன வேண்டும் என்று வினயமாய் சற்று தலையை முன்னே தாழ்த்தி கேட்கும் முக அமைப்பு நம்மை சிலிர்த்திட வைக்கிறது. பூலோகம் தாங்கிய புருஷரல்லவா இவர் எனும் பிரமிப்பு மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. யாகபாத்திரங்கள் கற்களாய் மாறியது எவ்வளவு சத்தியம் என்பது நாம் அந்த சந்நதியில் நம்மை மறந்து நிற்கும்போது புரிகிறது. உட்பிராகாரத்தில் தாயார் சந்நதி தனியே உள்ளது. அருள் கொப்பளிக்கும் முகத்தோடு அழகாய் காட்சி தருகிறாள். அருகே பத்து அவதாரங்களும் கற்சிலைகளாக வடிக்கப்பட் டிருக்கின்றன. பார்ப்போரை பரவசப்படுத்தும். வெளிப் பிராகாரத்தில் தெற்குப் பக்கமாய் சாஸ்தா மண்டபமும், வடகிழக்குப் பகுதியில் தர்மசாஸ்தாவும் அருள் மழை பொழிகிறார்கள். சித்திரைத் திருநாள் அன்று பத்து நாட்கள் உற்சவம் நடக்கிறது. ஊரே களைகட்டும். திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

Related Stories: