சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி (திமுக) பேசுகையில், ‘‘ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள எம்சி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்திய அளவில் ஜவுளி வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் இடமாகவும் உள்ளது. தினசரி இங்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் மட்டுமின்றி பிறமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கிறார்கள். அதன்படி தினசரி ஒரு லட்சம் பேருக்கும் மேல் வந்து செல்கின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்களில் இந்த தெருக்களில் நடக்க கூட இடம் இல்லாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் இங்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த எந்த வசதியும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்யப்படவில்லை. இந்த சிரமத்தை உணர்ந்து அடுக்குடிமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும்.அமைச்சர் கே.என்.நேரு: தி.நகரில் அகலமான நடைபாதை வசதி இருப்பது போல, அகலமான பாதை வசதி கொண்ட பகுதியாக எம்சி சாலையை மாற்ற இருக்கிறோம். வியாபார ஸ்தலமாக இருக்கிற காரணத்தால் பக்கத்தில் அண்ணா பார்க் பக்கத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். ஐட்ரீம் மூர்த்தி: கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாநராட்சி ஆணையர், சிங்கார சென்னை திட்ட தலைமை அதிகாரி மற்றும் அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்தனர். கிட்டத்தட்ட ரூ.24 கோடி திட்டமதிப்பீட்டில் பணிகளை செய்வதற்காக ஒரு ஒப்புதலை கொடுத்தனர். அதற்கு பிறகு நவம்பரில் ஏற்பட்ட மழைக்காலத்தில் அங்கு மேலும் ரூ.4 கோடி கூடுதலாக செலவு செய்ய வேண்டியது இருக்கின்றது என்ற அடிப்படையில் அப்போது அந்த திட்டம் செய்வதற்கு மிகவும் கடினமாக இருப்பதாக சொன்னார்கள். எனவே, ராபின்சன் பூங்காவையும், எம்சி ரோட்டையும் இணைத்து ஒரு பன்னடுக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். அமைச்சர் கே.என்.நேரு: பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்டமதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பணி விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது….
The post தினசரி வரும் 1 லட்சம் பேரின் வசதிக்காக ராயபுரம் எம்சி ரோட்டில் மல்டிலெவல் பார்க்கிங்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.
