திருநின்றவூர் பகுதியில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் கைது

ஆவடி: திருநின்றவூர் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன், டாஸ்மாக் பார்கள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே ஸ்டேஷன், டாஸ்மார்க் கடை, வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோய் வந்தன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் மேற்கண்ட காவல் நிலையங்களில் புகார் செய்தனர். இதனையடுத்து, முத்தாபுதுபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. நேற்று தனிப்படை போலீசார் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலை, பாலவேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை  வழிமடக்கினர். அப்போது, போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். மேலும், அவர் வந்த பைக்கிற்கு எவ்வித ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பைக்கை பறிமுதல் செய்து வாலிபரை பிடித்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.   விசாரணையில் திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 3வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (29) பெயிண்டர். திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, திருவள்ளூர், வெங்கல், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் ரயில்வே ஸ்டேஷன், வீடு, கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவர் ஒரு சாவி மூலம் தான் அனைத்து இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளார். இவர் மீது ஏற்கனவே 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் திருடிய வாகனங்களை திருநின்றவூரை அடுத்த பாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்த மெக்கானிக் மணிகண்டன் (29) என்பவர் மூலம் பைக்குகளை விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 11 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், திருடி இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த மணிகண்டனையும் போலீசார் பிடித்தனர். இதன் பிறகு, போலீசார் கார்த்திக், மணிகண்டன் இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post திருநின்றவூர் பகுதியில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: