ஆறுமுகநேரி, மே 17: ஆறுமுகநேரி குதிரைக்காரன் குட்டம் கிணற்றில் தொழிலாளி சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் ராஜா(40). கட்டிட தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், சுரேந்தர், சுதர்சன், சுதாகர் என 3 மகன்களும் உள்ளனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் இருந்து ராஜா பைக்கில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலை 6 மணியளவில் குதிரைக்காரன் குட்டம் கிணற்றுக்குள் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ஏரல் தீயணைப்பு துறையினர், கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சடலமாக கிடந்தவர், கட்டிட தொழிலாளி ராஜா என்பது தெரிய வந்தது. கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த ராஜா, நேற்று அதிகாலையில் குதிரைக்காரன் குட்டம் பகுதிக்கு வந்து இங்குள்ள வீடுகளை சேர்ந்த நபர்களிடம் அரிவாள் வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் யாரும் கொடுக்காத நிலையில், கிணற்றில் சடலமாக மிதந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆறுமுகநேரியில் கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு appeared first on Dinakaran.
