ஆகம விதி இல்லாத கோயில்களிலும் அர்ச்சகர்களை நியமனம் செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி

சென்னை: ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்வதையோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘ இந்த வழக்கை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கிறோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது மூன்று மாதங்களில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில், அதற்கு அப்பாற்பட்ட கோயில் எத்தனை என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ராமேஸ்வரம் கோயிலில் காலியாக இருக்கும் அர்ச்சகர்கள் மற்றும் மணியம் (நிர்வாக அதிகாரி ) ஆகிய பணியிடங்களை உரிய ஐதீகம் கொண்ட நபர்களை கொண்டு தமிழ்நாடு அரசு நியமனம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு என்பது ராமேஸ்வரம் கோயிலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும் என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்களின் ஒருவரான குருகிருஷ்ணகுமார், ஆகம விதிகள் இல்லாத கோயில்கள் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது என்று நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் ஆகம விதிகள் இல்லாத கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் மணியம் ஆகியோர்களை அரசு நியமனம் செய்யலாம். அதற்கு எந்தவித தடையும் நாங்கள் தற்போது பிறப்பிக்கவில்லை என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post ஆகம விதி இல்லாத கோயில்களிலும் அர்ச்சகர்களை நியமனம் செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: