கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாரதி நகர் கடைவீதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் மேடான பகுதியில் உள்ள சாலை கடந்த 2 வருடங்களுக்கு மேல் பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக இந்த சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து தற்போது வேறு பகுதியில் சுற்றி இயக்கப்படுகிறது. இப்பகுதிக்கு நேற்று நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வந்த நிலையில் தனது வளர்ப்பு ஆட்டுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் ஒருவர், அதனை கைகளால் தூக்கிக்கொண்டு மருத்துவ வாகனத்திற்கு கொண்டு வந்தார்.
வழக்கமாக கால்நடை மருத்துவ வாகனம் சாலை அருகில் உள்ள வீடுகளுக்கு அருகில் சென்று கால்நடைகளுக்கு மருத்துவம் செய்வது வழக்கம். ஆனால் இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகனத்தை இயக்குவதில் உள்ள சிரமம் காரணமாக வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி கால்நடைகளை கொண்டு வரச்சொல்லி மருத்துவம் செய்து வருகின்றனர். உருவத்தில் சிறிய கால்நடைகளான ஆடு, கோழி போன்றவற்றை பொதுமக்கள் தூக்கிக்கொண்டு வந்து சிகிச்சை அளித்து, பின்னர் கொண்டு செல்கின்றனர்.
இப்பிரச்னையால் மாடு உள்ளிட்ட பெரிய விலங்குகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதையடுத்து இப்பகுதியில் சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூடலூர் அருகே மோசமான சாலையால் அவதி நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்திற்கு சிகிச்சைக்காக ஆட்டை தூக்கி வந்த பெண் appeared first on Dinakaran.