திருவண்ணாமலை, ஏப்.23: திருவண்ணாமலையில் இயக்க அனுமதி பெற்ற 1,750 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு ஸ்டிக்டர் ஒட்டும் பணியை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரமாகும். தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எனவே, 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் நகரமாக திருவண்ணாமலை மாறிவிட்டது. அதனால், திருவண்ணாமலையில் ஆட்டோக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, புற்றீசல் போல ஆட்டோக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவிட்டன. உரிய ஆவணங்கள் இல்லாத, வெளி மாவட்ட ஆட்டோக்களும் இங்கு அனுமதியின்றி இயக்கப்படுகிறது. அதனால், அதுபோன்ற ஆட்டோக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதோடு, குறைந்த தூரத்துக்கு கூடுதல் கட்டணம், அதனால் வாக்குவாதம் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, திருவண்ணாமலை நகரில் இயக்க வட்டார போக்குவரத்துத்துறையால் அனுமதிக்கப்பட்ட ஆட்டோக்களை அடையாளம் காணவும், ஆட்டோக்களின் விபரங்களை பயணிகள் அறிந்து கொள்ள வசதியாகவும் கியூஆர் கோடு வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி, வட்டார போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்து காவல் பிரிவும் இணைந்து கடந்த 3 மாதங்களாக, ஆட்டோக்களின் பதிவு விபரம், இன்சூரன்ஸ், உரிமையாளரின் விபரம் போன்றவற்றை ஆய்வு செய்து, அனுமதி வழங்கினர். அவ்வாறு அனுமதி பெற்ற ஆட்டோக்களுக்கு மட்டும் கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இயக்கப்படும் 2,160 ஆட்டோக்களில், முழுமையான விபரங்கள் சரிபார்க்கப்பட்டு முதற்கட்டமாக 1,750 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகள், கியூஆர் கோடை தங்கள் செல்போனில் ஸ்கேன் செய்து, உரிய விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இயக்க அனுமதி பெற்ற ஆட்டோக்களில், கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஆட்டோ ஓட்டுநர்களின் கடமை. அப்போதுதான், நம்முடைய ஊரின் மீது நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் கருணாநிதி, மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், அமைப்புசாரா தொமுச மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் உடனடிருந்தனர்.
The post 1,750 ஆட்டோக்களுக்கு கியூஆர் கோடு பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடு திருவண்ணாமலையில் அனுமதிக்கப்பட்ட appeared first on Dinakaran.