சென்னை: மறுமலர்ச்சி தி.மு.க.வை கடந்த 1994-ம் ஆண்டு வைகோ தொடங்கினார். கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ, தொடக்க காலங்களில் அரசியலில் ஈடுபடாமல் பொது சேவைகளில் மட்டுமே ஈடுபட்டு வந்தார்.
கட்சியினரின் விருப்பம் காரணமாக கட்சிக்குள் வந்த துரை வைகோ, சாதாரண தொண்டராகவே இருந்தார். பின்னர் தலைமை கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த ம.தி.மு.க.வின் 29-வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிருப்தி அடைந்த அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இதற்கிடையே, துரை வைகோவின் ஆதரவாளர்கள், கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டனர்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இதுபோன்ற தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது என்றும், இதுகுறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க ஏப்ரல் 20-ந் தேதி (அதாவது இன்று) கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அதன்படி ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த நிலையில், கட்சியின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் ம.தி.மு.க.வுக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள ம.தி.மு.க .துணை பொதுச் மல்லை சத்யா ‘நான் வைகோவின் சேனாதிபதி” என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர், ” நான் திராவிட இயக்கப் போர்வாள்; தலைவர் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் தலைவர் வைகோவின் முகம் பதித்த மோதிரம்; சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம். இதுதான் என் அடையாளம். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த புனித ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள். என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்” என்று தெரிவித்துள்ளார்.
The post நான் திராவிட இயக்கப் போர்வாள்; தலைவர் வைகோவின் சேனாதிபதி: மல்லை சத்யா appeared first on Dinakaran.