புதுடெல்லி: ஆவின் முறைகேடு வழக்கில் ஆளுநர் அனுமதி தந்து இருப்பதால் விரைவில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 33 பேரிடம் ரூ.3 கோடியை, விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலமாக பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்து 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி விருதுநகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ரவீந்திரன் என்பவர் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது கடந்த மாதம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சப்ரீஸ் சுப்ரமணியன் ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில்,\\”அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளார். இதையடுத்து அதனை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஓரிரு நாளில் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதுசார்ந்த விரிவான விவரங்கள் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
The post ஆவின் முறைகேடு வழக்கில் ஆளுநர் அனுமதி; ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.