மகளை தகாத வார்த்தையால் திட்டியதால் கிரிக்கெட் பேட்டால் அடித்து நண்பரை கொன்ற டெலிவரி ஊழியர்: சடலத்தை சாலையில் தரதரவென இழுத்து வீச்சு

சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவரது சொந்த ஊர் சங்கரன்கோவில். இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது மகன், மகள் இருவரும் சங்கரன்கோவிலில் விடுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். மணிகண்டன் சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் மகன், மகளை சங்கரன்கோவிலில் இருந்து மணிகண்டன் அழைத்து வந்துள்ளார்.

இவரது வீட்டுக்கு அருகில் ஆறுமுகம் என்கிற சிக்கந்தர் ஆறுமுகம் (40), புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு அருகில் மட்டச்சாளை அமைத்து குடியிருந்து வந்தார். நண்பர்களான இருவரும் தினமும் மது குடித்துவிட்டு அருகில் உள்ள காலி இடத்தில் கொசுவலை கூடாரம் அமைத்து ஜாலியாக இருப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் மது அருந்தினர். சிக்கந்தர் ஆறுமுகம் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று புரோட்டா, தோசை வாங்கி வந்தார்.

இருவரும் சாப்பிட்டனர். மணிகண்டனின் மகள் சாப்பிடாமல் தூங்கிவிட்டார். அவரை சாப்பிட வலியுறுத்தி போதையில் சிக்கந்தர் ஆறுமுகம் எழுப்பியதாகவும், அப்போது அவர் தகாத வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அங்கிருந்த கிரிக்கெட் பேட்டால் சிக்கந்தர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினார்.

இதில் அவர் உயிரிழந்தார். அவரது உடலை தரதரவென இழுத்து சென்று பல்லடம்-கொச்சி சாலையில் வீசிவிட்டு வந்துவிட்டார். பின்னர் மகன், மகளுடன் ஒண்டிப்புதூரில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். படம் முடிந்து நள்ளிரவு வீடு திரும்பினார். இதற்கிடையே கொலை குறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் விசாரணையில் சிக்கந்தர் ஆறுமுகத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

The post மகளை தகாத வார்த்தையால் திட்டியதால் கிரிக்கெட் பேட்டால் அடித்து நண்பரை கொன்ற டெலிவரி ஊழியர்: சடலத்தை சாலையில் தரதரவென இழுத்து வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: