புதுடெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பல திறமையான கைவினைஞர்கள் ஜவுளித்துறையில் சாதிப்பதற்கு தவறி விட்டதாக ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேஷன் டிசைன் துறையில் சிறந்து விளங்க முயற்சிக்கும் ஜவுளி கைவினைஞர் விக்கி என்பவரின் கடைக்கு சென்று கலந்துரையாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ராகுல்காந்தி தனது பதிவில்,“ ஜவுளி வடிவமைப்புத்துறையில் உச்சத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை நான் ஒருபோதும் சந்தித்தது இல்லை. இதனை விக்கி தெரிவித்தார். இதனை தனது திறமைகளின் அடிப்படையில் இந்த துறையில் தனது தொழிலை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இளைஞர் விக்கி கூறியிருக்கிறார். அவரது தொழிற்சாலையில் உள்ள கைவினைஞர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் கடுமையாக உழைக்கிறார்கள்.
ஊசி மற்றும் நூலால் நெய்வதில் மேஜிக் செய்கிறார்கள். ஆனால் நிலைமை அப்படியே தான் இருக்கின்றது. அவர்களது திறமைக்கு எந்த பாராட்டும் இல்லை. மற்ற தொழில்களை போலவே பகுஜன்களுக்கு ஜவுளி மற்றும் பேஷன் துறையில் பிரதிநிதித்துவம் இல்லை. கல்விக்கான அணுகல் அல்லது நெட்வொர்க்கில் இடம் இல்லை. உழைப்பாளிகளாக இருந்தபோதிலும் இந்த இளைஞர்கள் புறக்கணிப்பு மற்றும் அநீதியின் தீய வட்டத்தில் சிக்கியுள்ள மகாபாரதத்தின் அபிமன்யு போன்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எனது போராட்டம் இந்த தீய வட்டத்தை உடைப்பதாகும்.” என்று பதிவிட்டுள்ளார்.
The post திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை ஓபிசி கைவினைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல்காந்தி வருத்தம் appeared first on Dinakaran.