இந்த இணை 80 ரன்கள் சேர்த்த நிலையில், 10வது ஓவரை வீசிய மஹீஸ் தீக்சனா, ஜோஸ் பட்லரை (25 பந்து, 36 ரன்), எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து மற்றொரு தமிழக வீரர் ஷாருக்கான், சாய் சுதர்சனுடன் இணை சேர்ந்தார். அதே ஓவரில் சாய் சுதர்சன் 50 ரன்களை கடந்தார். 13வது ஓவர் முடிவில், ஸ்ட்ரேடஜிக் டைம்அவுட் இடைவேளையின் போது, குஜராத், அணியின் ஸ்கோர், 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்.
15வது ஒவர் முடிவில் இந்த இணை, 50 ரன்களை கடந்தது. இந்நிலையில், 16வது ஓவரில், தீக்சனா வீசிய பந்தை ஷாருக்கான் (20 பந்து, 36 ரன்) ஏறி அடிக்க முயன்றபோது, சஞ்சு சாம்சன், ஸ்டம்ப் செய்து அவரை அவுட்டாக்கினார். பின்னர், ஷெர்பான் ரூதர்போர்டு களமிறங்கினார். அவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்காமல், சந்தீப் சர்மா வீசிய பந்தில், 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதையடுத்து, ராகுல் தெவாதியா, சுதர்சனுடன் இணை சேர்ந்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில், சாய் சுதர்சன் (53 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி, 82 ரன்), சஞ்சு சாம்சனிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரஷித் கான் உள்வந்தார். அதே ஓவரில், ரஷித் கான் 12 ரன்னில், தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில், குஜராத் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில், தீக்சனா, தேஷ்பாண்டே தலா 2, ஆர்ச்சர், சந்தீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
ராஜஸ்தான் அணியில் ஹசரங்கா ‘மிஸ்ஸிங்’
குஜராத் அணியுடனான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான வனிந்து ஹசரங்கா ஆடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர், நேற்றைய அணியில் இடம்பெறவில்லை என, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார். அவருக்கு பதிலாக இடது கை பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபரூக்கி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சாம்சன் கூறினார். ராஜஸ்தான் அணிக்காக இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள ஹசரங்கா, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக சென்னை அணியுடனான முதல் போட்டியில் ஹசரங்கா 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு துாண்டுகோலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷித் கானுக்கு என்னதான் ஆச்சு?
நடப்பு ஐபிஎல் தொடரில் ரூ. 15 கோடிக்கு, குஜராத் டைடன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர், அற்புதமாக பந்து வீசி எதிரணியினரை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த வல்லவர். ஆனால், நடப்பு தொடரில் ரஷித் கான் பந்துகளை எதிரணி வீரர்கள் வெளுத்து வாங்குகின்றனர். மூன்று போட்டிகளில் அவர் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவரது ஐபிஎல் வாழ்க்கையில் இதுபோன்று நடப்பது, இது இரண்டாவது முறை. குஜராத் அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் ரஷித் கான் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். அவர் போடும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் எதிரணி வீரர்கள் விளாசித் தள்ளுவதால், ஒரு ஓவருக்கு சராசரியாக 10.21 ரன்களை வாரி இறைத்துள்ளார். அதனால், ரஷித் கானுக்கு என்னதான் ஆச்சு என தெரியாமல் குஜராத் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
புவனேஷை முந்தினார் சென்னையின் அஸ்வின்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின்போது, சென்னை அணி வீரர் அஸ்வின் 4 ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில், பெங்களூரு அணியின் புவனேஷ் குமாரை பின்தள்ளி, அஸவின் 3வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த அஸ்வின், 217 போட்டிகளில் ஆடி 185 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஒரு ஓவருக்கு, சராசரியாக, 7.18 ரன்களை தந்துள்ளார். அதேசமயம், புவனேஷ் குமார், 179 போட்டிகளில் ஆடி 184 விக்கெட் எடுத்துள்ளார். அவர், ஒரு ஓவருக்கு சராசரியாக, 7.57 ரன்களை விட்டுத் தந்துள்ளார். இந்த பட்டியலில், பஞ்சாப் அணி வீரர் யுஸ்வேந்திர சஹல், 164 போட்டிகளில் ஆடி 206 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். சுழல் பந்து வித்தகர் பியுஷ் சாவ்லா, 192 போட்டிகளில் ஆடி, 192 விக்கெட்டுகள் வீழ்த்தி 2ம் இடத்தில் உள்ளார்.
The post ராஜஸ்தானுடன் ஐபிஎல் போட்டியில் குஜராத் 217 ரன் குவிப்பு appeared first on Dinakaran.