டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு; அக்சர் படேல் துணை கேப்டனாக நியமனம்!

 

மும்பை: 2026ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் அக்சர் படேல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 10வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு இந்தியாவுடன், பாகிஸ்தான், நமிபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகிறது.

அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12ம் தேதி டெல்லியில் மோதுகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18ம் தேதி அகமதாபாத்தில் மோதுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொண்டார். சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்துள்ளது. திலக்வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்குசிங், பும்ரா, ஹர்ஷித் ராணா உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஜிதேஷ் சர்மாவும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை அணியில் மாற்றம் செய்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

 

 

Related Stories: