செய்யாறில் போதை ஊசி தகராறில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

செய்யாறு, ஏப். 9: செய்யாறு டவுன் கண்ணியம் நகரை சேர்ந்தவர் சில்க் என்கிற ஜெமினி(22) அதே பகுதியை சேர்ந்த அக்னி என்கிற சுனில் இருவரும் அடிக்கடி போதை ஊசி செலுத்துக் கொள்வார்களாம். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி மாலை சுனில் அவரது நண்பர்கள் கார்த்திக், அருண் குமார், திலீப் குமார், பெங்களூரான், குமரேசன் உள்ளிட்டோர் ஜெமினி வீட்டிற்கு சென்று போதை ஊசி செலுத்தி கொள்ளலாம் என கூறி அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து ஜெமினியின் தந்தை சரவணன் கடந்த மாதம் 30ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது போதை ஊசி தகராறில் ஜெமினியை சுனில் உள்ளிட்ட 6 பேரும் கத்தியால் குத்திக்கொன்று சடலத்தை பிளக்ஸ் பேனரில் சுற்றி புளியரம்பாக்கம் ஏரியில் வீசியது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2ம் தேதி சுனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கார்த்திக், குமரேசன், திலீப் குமார், அருண்குமார் ஆகிய 4பேரை கடந்த 3ம் தேதி கைது செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்த பெங்களூரான் என்கிற கேசவனை செய்யாறு போலீசார் நேற்று கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மேஜிஸ்ட்ரேட் பாக்யராஜ் உத்தரவின் பேரில் பெங்களூரானை வேலூர் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

The post செய்யாறில் போதை ஊசி தகராறில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: