சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை: பல கோடி மதிப்பு முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில்  கோகுலம் டவர்ஸ் என்ற கட்டிடத்தில் ‘கோகுலம் சிட் மற்றும் பைனான்ஸ் கோ பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்து உள்ளனர். நிதி நிறுவனத்தின் உரிமையாளரும் சினிமா தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலன் என்பவர் அண்மையில் ‘எல்2 எம்புரான்’ என்ற திரைப்படம் எடுத்தார். இந்நிலையில், சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக இந்த நிதி நிறுவனத்தின் மீது கடந்த 2017ம் ஆண்டே குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சினிமா தயாரிப்பாளரான கோகுலம் கோபாலுக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே குஜராத் கலவரத்தை மையமாக கொண்டு கோகுலம் சினிமா தயாரிப்பு நிறுவனம் பேன் இந்தியா திரைப்படமாக எடுத்துள்ளது. இந்த திரைப்படம் கேரள சினிமா துறையில் ரூ.100 கோடிக்கு ேமல் வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்து அமைப்புகளுக்கு எதிராக இந்த படத்தில் காட்சிகள் இருந்ததால் சங்க்பரிவார் அமைப்புகள் எம்புரான் படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தன. அதேநேரம் முல்லை பெரியார் அணை தொடர்பாகவும் ‘எல்2 எம்புரான்’ திரைப்படத்தில் சில காட்சிகள் வருகிறது. இந்த காட்சிக்கு தமிழகத்திலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சினிமா தயாரிப்பாளரும் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தின் அதிபருமான கோகுலம் கோபாலுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குறிப்பாக, தலைமை அலுவலகமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலாங்கரையில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் கேரளாவில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் வீடுகளிலும் நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. இந்த சோதனை இன்றும் நீடிக்கும் என கூறப்படுகிறது. எனவே சோதனை முடிந்த பிறகு தான் எத்தனை கோடி அளவுக்கு சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரியும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எல்2 எம்புரான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கோகுலம் கோபாலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை: பல கோடி மதிப்பு முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Related Stories: