கொள்ளையன் என்கவுன்டரில் தலைமறைவு குற்றவாளி கைது

கடலூர், ஏப்.4: கடலூர் தொடர் வழிப்பறி கொள்ளையன் என்கவுன்டரை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அடுத்தடுத்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் தலைவனான புதுச்சேரி திலாசுபேட்டையைச் சேர்ந்த விஜய் என்ற மொட்டை விஜய் (19), கடலூர் எம்.புதூர் காசநோய் மருத்துவமனை அருகே முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விஜியை பிடிக்க முயன்றபோது, திடீரென பாய்ந்து வந்து 2 காவலர்களை கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் ஆய்வாளர் சந்திரனை தாக்க முயன்றபோது தற்காப்புக்காக அவர் சுட்டதில் விஜய் உயிரிழந்தார். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளை கும்பல் தலைவனின் கூட்டாளிகளான ரேவந்த் குமார் (21), அன்பரசு (20), ரியாஸ் அகமது (22) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆகாஷ் என்பவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடலூர் அருகே எம்.புதூரில் உள்ள காசநோய் மருத்துவமனை அருகே பதுங்கியிருந்த ஆகாஷை நேற்று மாலை போலீசார் பிடித்து கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனிடையே என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட விஜய் உடல், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நெய்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி பிரவீன்குமார் முன்னிலையில் மருத்துவர்கள் குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் உடற்கூறு ஆய்வுப்பணி முடிந்து உறவினரான ஜெயந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post கொள்ளையன் என்கவுன்டரில் தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: