குற்றவாளியிடம் பறிமுதல் செய்த செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் மோசடி பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுரளி. இவர் தனது கடையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த கீழ்பென்னாத்தூர் போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டனை காலம் முடிந்து பாலமுரளி கடந்த 3 மாதத்திற்கு முன்பு வெளியே வந்தார். சிறையில் இருந்த காலத்தில் பாலமுரளியின் செல்போன் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

காவல்நிலையத்திற்கு சென்று செல்போனை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றபோதுதான் வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ஜிபேவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து பாலமுரளி டிஜிபிக்கு ஆன்லைனிலும், எஸ்பி சுதாகருக்கும் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் எஸ்பி சுதாகர் நடத்திய விசாரணையில் பாலமுரளியின் செல்போனில் கீழ்பென்னாத்தூர் எஸ்ஐ கவிதா ரூ.1.70 லட்சத்தை அவரது உறவினர் செல்போனுக்கு பண பரிவர்த்தனை செய்து பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து எஸ்ஐ கவிதாவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார்.

Related Stories: