பிளஸ் 2 தேர்வு எழுத படிக்கட்டை பிடித்தபடி ஓடிய மாணவி பஸ்சை நிறுத்தாமல் சென்ற கண்டக்டர் அதிரடி டிஸ்மிஸ்: டிரைவர் சஸ்பெண்ட்

ஆலங்காயம்: பிளஸ் 2 தேர்வு எழுத மாணவி காத்திருந்த நிலையில், பஸ்சை நிறுத்தாமல் சென்ற அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கண்டக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து நேதாஜி நகர், கொத்தக்கோட்டை, நிம்மியம்பட்டு வழியாக ஆலங்காயத்திற்கு தடம் எண் 1 ‘சி’ என்ற அரசு டவுன் பஸ் இயங்கி வருகிறது. இந்த டவுன் பஸ் வழக்கம்போல் நேற்று காலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டது.

ஆனால், வழியில் பெரும்பாலான நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல், கொத்தகோட்டை பஸ் நிறுத்தத்திலும் பஸ் நிற்காமல் சென்றது. அப்போது, அங்கு நிம்மியம்பட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 இறுதி தேர்வு எழுத செல்வதற்காக காத்திருந்த மாணவி ஒருவர், பஸ் நிற்காமல் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சை நிறுத்தும்படி கூறியபடியே மாணவி பஸ்சை பிடித்தபடி தொடர்ந்து ஓடினார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை தொடர்ந்து பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர், பொதுமக்கள், பயணிகள் அந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த மாணவியை பஸ்சில் ஏற்றி சென்றனர். நிற்காமல் சென்ற பஸ்சை பிடிக்க மாணவி ஓடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி தகவலறிந்த போக்குவரத்து துறை பொது மேலாளர் உத்தரவின்பேரில் பஸ் டிரைவர் முனிராஜை சஸ்பெண்ட் செய்து ஆம்பூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், தற்காலிக கண்டக்டரான அசோக்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

The post பிளஸ் 2 தேர்வு எழுத படிக்கட்டை பிடித்தபடி ஓடிய மாணவி பஸ்சை நிறுத்தாமல் சென்ற கண்டக்டர் அதிரடி டிஸ்மிஸ்: டிரைவர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: