இந்தாண்டு கோடை மின்தேவை 22,000 மெகாவாட் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், எதிர்வரும் கோடைகாலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மற்றும் சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சபட்ச மின்தேவை முறையே 19,500 மெகாவாட், 21,943 மெகாவாட் மற்றும் 22,079 மெகாவாட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரியத்தின் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் முழுத்திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் வகையில் தடையில்லா மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய, அனைத்து துணை மின் நிலையங்களிலும் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யவேண்டாம் என தலைமைப் பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராதாகிருஷ்ணன், அனைத்து மேலாண்மை இயக்குநர்கள், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்தாண்டு கோடை மின்தேவை 22,000 மெகாவாட் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: