டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையிலிருந்து விலகல்: வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்திருந்தனர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில்மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக இரு நீதிபதிகளும் அறிவித்தனர். மேலும், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர்.

The post டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையிலிருந்து விலகல்: வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: