சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் மனமுவந்து விவாகரத்து வழங்கக்கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பாடகி சைந்தவி மனு: ஒரே காரில் ஒன்றாக திரும்பி சென்றனர்

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் -பாடகி சைந்தவி ஆகியோர் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பள்ளி காலத்தில் இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு 12 ஆண்டுகள் கணவன், மனைவியாக இருந்தார்கள். இந்நிலையில் யாருமே எதிர்பாராவிதமாக கடந்த 2024ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.

இதையடுத்து, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகினார். இருவரிடமும் விசாரணை நடத்திய நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து, இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர். ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் மனமுவந்து விவாகரத்து வழங்கக்கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-பாடகி சைந்தவி மனு: ஒரே காரில் ஒன்றாக திரும்பி சென்றனர் appeared first on Dinakaran.

Related Stories: