நத்தம் மாரியம்மன் மின்ரதத்தில் நகர்வலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 

நத்தம்: தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவில் அம்மன் மின்ரதத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

இதன்படி சித்திரை முதல் நாளான நேற்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவில் அம்மன் சர்வ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் மின்ரதத்தில் எழுந்தருளினார். பின்னர், கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியகடை வீதி, மார்க்கெட் பகுதி, காவல் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக மின்ரதத்தில் நகர்வலம் சென்றார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர். பின்னர், அம்மன் மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், பூசாரிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: